இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அடுத்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது ஆசிய ஒத்துழைப்பு உச்சி மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி குவைத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் 17ஆம் திகதி வரை இடம்பெறும்.இதில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட 31 ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குவைத்தில் தங்கியிருக்கும் போது, பக்க நிகழ்வாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இருதரப்புப் பேச்சுகளை நடத்துவதற்கான ஒழுங்குகள் தற்போது இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கான நாள், நேரம் என்பன குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.கடந்தமாதம் 20ஆம் திகதி மகிந்த ராஜபக்சவும், மன்மோகன்சிங்கும் புதுடில்லியில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
குவைத்தில் இவர்கள் மீண்டும் சந்தித்தால், ஜெனிவாவில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டம் தொடர்பாகக் கலந்துரையாடப்படலாம் என்று கருதப்படுகிறது.