9/11/2012

| |

தேசிய நல்லிணக்கம், கிழக்கின் அபிவிருத்தியை மேலும் முன்னெடுக்க அரசுடன் ஒன்றுபடுங்கள்

முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்புக்கு அமைச்சர் டளஸ் பகிரங்க அழைப்பு

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும், கிழக்கை மேலும் அபிவிருத்தி செய்வதற்காகவும் எம்முடன் ஒன்றுபட்டு கைகோர்க்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கும் நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான டளஸ் அழகப் பெரும நேற்று குளியாப்பிட்டியில் தெரிவித்தார்.
குளியாப்பிட்டி, தெதிகம நகரில் புதிய குடி நீர் வழங்கல் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்; இப்போது தேர்தல் முடிந்து விட்டது. இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என மீண்டும் பிரிந்து செயற்பட முடியாது. தேசிய நல்லிணக்கம் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும். அதனைக் கட்டியெழுப்புவதற்குரிய சிறந்த இடமாக கிழக்கு மாகாணம் விளங்குகின்றது.
தேர்தல் காலத்தில் சில அரசியல் கட்சிகள் இன வாதத்தையும், மதவாதத்தையும் தூக்கிப் பிடித்தன. ஆனால் ஜனாதிபதி, “இனவாதம் வேண்டாம். மதவாதம் வேண்டாம் தேசிய ரீதியாக சிந்தித்து எல்லோரையும் ஒன்றுபடுமாறு கேட்டுக் கொண்டார்.
மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப் பட்டது முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரையான 67 நாட்களிலும் நாம் தேசிய நல்லிணக்கத்தையே பரவலாக வலியுறுத்தினோம். இப்போது தேர்தல் முடிந்து விட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கும் நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பு வதற்காகவும், கிழக்கை மேலும் அபிவிருத்தி செய்வதற்காகவும் எம்முடன் ஒன்றுபட்டு கைகோர்க்க வேண்டும்.
அதேநேரம் 2005ம் ஆண்டு முதல் நடந்து முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தல் வரையும் பத்து தேர்தல்கள் நடாத்தப்பட்டுள்ளன.
இத்தேர்தல்கள் அனைத்திலும் ஐ.ம.சு. முன்னணியே அமோக வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கின்றது. அந்தடிப்படை யிலேயே ஐ.ம.சு.மு. இத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005ம் ஆண்டில் இந்நாட்டின் ஜனாதிபதி யாகப் பதவி ஏற்றதும் நாட்டின் அரசியல் பாதையை சீரமைத்தார். ‘நாட்டுக்காக’ என்ற தேசிய நிகழ்ச்சி நிரலை அவர் தொடக்கி வைத்தார். பிரதேச வேறு பாடுகளின்றி முழு நாட்டையும் துரிதமாக அபிவிருத்தி செய்வதில் அவர் விசேட கவனம் செலுத்தியுள்ளார். அதற்கான வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்துள்ளார் என்றார்.